Friday, 30 January 2015

தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்

 


இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் /  தனித் தேர்வர்களும் பயன் பெறும் வகையில் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த அரிய வாய்ப்பின் மூலம் தங்களின் விடைத்தாட்கள் சரியாகத் திருத்தப்பட்டுள்ளனவா என்று அறிந்துகொள்ள விரும்பும் மாணவ / மாணவிகளின் விடைத்தாட்களின் ஒளி நகல் பெற
www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையை கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன்  மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.



விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்  - 02.02.2015 திங்கட்கிழமை முதல் 6.02.2015 வெள்ளிக்கிழமை வரை

• தற்போது புதிதாக விடைத்தாள் நகல் நாட்களில்  மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து தற்போது விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள்.  ஒரு பாடத்திற்கு ரூ.70/- 

30.12.2014 முதல் 05.01.2015 வரை விடைத்தாளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.275/- ஒரு பாடத்திற்கு ரூ.205/- செலுத்த வேண்டும்.

மறுகூட்டல் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலேயே கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு  அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.


வரிசை எண் 1 மற்றும் 2ல் குறிப்பிட்ட  தேர்வர்கள் ஆன்லைன் கட்டணம் ரூ.50/- கூடுதலாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.02.2015 மாலை 5.00 மணி வரை.

ஜூன் 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு வருகை புரியவிருக்கும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மாணவர் மேம்பாட்டுக்காக பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் தொடக்கம்



 


காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மற்றும் மாணவர் மேம்பாட்டுக்காக முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.


காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் செயல்படும் புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும்  தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் (அலும்னி அசோசியேஷன்) முதலாமாண்டாக தொடங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் பி.தம்பிதுரை தலைமை வகித்து, கல்லூரியில் கல்வி முடிந்து வெளியேறிய முன்னாள் மாணவர்களிடையே புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஏற்பாடு செய்தார். இதன்படி தலைவராக கோ.திணேஷ்குநாத், துணைத் தலைவராக கே.வேலுமணி, பொதுச்செயலராக எஸ்.சதீஷ்குமார், இணை செயலராக எஸ்.ராஜரூ, பொருளாளராக டி.சரண்யா மற்றும் செயற்குழு உறுப்பினராக 7 பேர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பேசும்போது, பொறியியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டவேண்டும். தாற்காலிக கட்டடத்தில் கல்வி பயின்று வெளியேறிய மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். பயிலும் மாணவர்கள் அச்சிரமத்தை சந்திக்காதிருக்க நிரந்தர கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்லூரியில் வேலைவாய்ப்புக்குரிய புதிய பாடப் பிரிவுகள் தொடங்கவேண்டும். முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தால் பயிற்சி அளிக்கவேண்டும். சிறந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும். நூலகத்தில் தரமான நூல்களை வாங்கிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினராக இருப்பர். கல்லூரியில் பயிலும் மாணவர்கள், கல்வி முடிந்து வெளியேறும் மாணவர்களுக்கு, மூத்த மாணவர்கள் துணையாக இருக்கவேண்டும். உயர்கல்வி, வேலைவாய்ப்புக்குரிய ஆலோசனைகள் வழங்கவேண்டுமென கல்லூரி முதல்வர் பி.தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.


கல்லூரி பேராசிரியர்கள் பி.குமார், எம்.ஆராமுதன், கல்லூரி முதுநிலை கணக்கு அலுவலர் துரைராஜன், கல்லூரி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபிநாத் உள்ளிட்டோர் மாணவர் சங்க நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.

எம்பிஏ படிப்புக்கு அழைப்பு விடுக்கும் காமராசர் பல்கலை


 


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


2015-16ம் கல்வியாண்டில் எம்பிஏ படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் mkuniversity.org என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.600 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.


நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், குழுகலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


மார்ச் 14 மற்றும் 15ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு மதுரை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

யுஜிசி வழங்கும் கல்வி ஆராய்ச்சி உதவித்தொகை அதிகரிப்பு

 

கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக்குழு மூலம் செயல்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், கடந்த நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் அனைத்து வகை கல்வி உதவித்தொகைகளும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வு பெற்ற பிறகும் ஆராய்ச்சியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோல, முழுநேர ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கான உதவித்தொகை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.38,800 என்ற அளவிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ.46,500 என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.


குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கான உதவித்தொகை மாதம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாதம் ரூ.15,000 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும்.


குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று முதுநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்பவர்களுக்கும் இதுவரை மாதம் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் 20 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகை இப்போது ரூ.3,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோல, பிற கல்வி உதவித்தொகைகளும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய முழுவிவரங்கள் தெரிந்து கொள்ள www.ugc.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, 10 January 2015

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

 
 
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும். 


பொதுத்தளங்கள்
 
அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன . 

 
 
 
தமிழ்
 
 
 
 
இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும். 

Maths 

 

 
இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது. 

Science 
 
 
இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.

2014: கரை சேர்ந்ததா கல்வி?

 

முதலில் இரண்டு செய்திகள். ஒன்று ‘எல்லோருக்கும் கல்வி’ என்ற குறிக்கோளை, உலகம் நிறைவேற்ற முடியாமல் முடங்கி கிடப்பதற்கு இந்தியாதான் முக்கிய காரணம் என்கிறது யுனெஸ்கோ. நம் நாட்டில் 37 சதவீதம் மக்கள் எழுத்தறிவு (கவனிக்க: கல்வியறிவு அல்ல) இல்லாமல் இருப்பதாக அது தெரிவிக்கிறது. 

இரண்டு, உயர் கல்வி வழங்குகிற நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. சமீபத்திய எர்னஸ்ட் - யங் அறிக்கையின்படி நம் நாட்டில் 44,668 கல்வி நிலையங்கள் உயர்கல்வி வழங்குகிறதாம். 

சீனாவில் 4192 என்றால் அமெரிக்காவிலேயே 6,500 தான் உள்ளதாம்.
சரி, இந்த முரண் நிஜங்களை விவாதிப்பதற்கு முன் இன்னொரு முக்கிய புள்ளிவிவரத்தையும் பார்த்துவிடலாமே! 


கல்வி மற்றும் பயிற்சிக்கான முக்கியமானச் சந்தையாக இந்தியா இருக்கிறது என்கிறது இன்வெஸ்டர் ரிலேஷன் சொசைட்டி. தொடர்ந்து வருடா வருடம் வேலை வாய்ப்புகள் பெருகும் துறை கல்வித்துறையே என்கிறது இண்டியன் ஜாப் அவுட்லுக் சர்வே. 



என் பார்வையில் 2014- ல் கல்வியின் முக்கிய போக்குகள் இவை தான்:
 
# ஆரம்பக் கல்வி சவலைப்பிள்ளையாய்தான் இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் இன்ன பிற அரசாங்க, தனியார் மற்றும் அயலார் முயற்சிகள் சில நகர்வுகளை ஏற்படுத்தினலும் வீச்சும் தரமும் இன்னமும் போதுமானதாக இல்லை. அரசாங்கத்திடம் அதிக ஆதாயம் பெறும் கார்ப்பரேட்டுகள் கருணை காண்பித்தால் சி.எஸ்.ஆர் புண்ணியத்திலும் சில மாறுதல்கள் கொண்டு வரலாம். 


# அதே போல ஆசிரியர் பயிற்சிக்கும், கல்வி முறை புதுப்பித்தலுக்கும் இன்னமும் நிறைய முதலீடுகள் தேவை. 2014 ஆம் ஆண்டில் இவை சொல்லிக்கொள்ளும் அளவு நடைபெறவில்லை. 

# பள்ளிகளில் தாய்மொழி, கைத்தொழில், விளையாட்டு, கலை, நீதி போதனை போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. கணிதமும் அறிவியலும் ஆங்கிலமும் முன்னிறுத்தப்படும் போக்கு வலுத்துள்ளது. நகரங்களை மிஞ்சும் வண்ணம் கிராமங்களிலும் இவை தீவிரமாக வளர்ந்து வருகின்றன.
தனியார் பள்ளி மோகமும் ஆங்கிலம் பற்றிய அச்சமும், பிற்கால வேலைக்கு இவை மட்டும்தான் பயன்படும் என்கிற நுகர்வோர் மன நிலையும் முக்கியமான காரணங்கள். 

# திறன் பற்றாக்குறைதான் இந்தியாவின் பேராபத்து. 130 கோடிகள் கொண்ட மக்கள் தொகையில் 80 கோடி மக்கள் வேலை பார்க்கக்கூடியவர்கள். திறனற்ற மாணவர்களை உருவாக்கியதால் உலகம் முழுக்க நம் நாட்டவர் சென்று பணியாற்றக் கூடிய அற்புத வாய்ப்பை தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.
பொறியியல் மாணவர்களில் வெறும் 17 சதவீதமும், நிர்வாக மாணவர்களில் வெறும் 10 சதவீதமும்தான் வேலைக்குத் தகுதியானவர்கள் என்ற அதிர்ச்சியான புள்ளிவிவரத்தை 2014- ல் சி.ஐ.ஐ நிறுவனம் ‘இண்டியா ஸ்கில் ரிப்போர்ட்’ டில் சுடச்சுட வெளியிட்டுள்ளது. கல்வித்துறையைச் சாராமல் திறன் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என அது சொல்வதைக் கவனிக்க வேண்டும். பள்ளிகளில் கைத்தொழில்கள் கற்றுத் தரும் காலம் தான் வருங்காலத்தைக் காப்பாற்றும். 

# கடந்த 20 வருடங்களாக பொறியியல் பட்டதாரிகள் தேவைக்கும் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் பொறியியல் பட்டதாரிகள் அந்த வேலை கிடைக்காமல் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் அதிகரிப்பது மக்களின் விழிப்புணர்வைக் காட்டுகிறது. 

தமிழகத்தில் மட்டுமல்ல, வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலும் இதுவே நிலை. ஒரு Default Degree அந்தஸ்தை பி.ஈ துறப்பது ஒரு ஆரோக்கியமான போக்கு. கலைக் கல்லூரிகளையும் மக்கள் சற்று ஏறெடுத்துப் பார்க்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன. 

# இந்தியாவின் 10 சதவீத மக்களுக்குத்தான் உயர்கல்விக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உயர்கல்விக்காக இங்கு ஒரு பெரிய சந்தை உருவாகியுள்ளது. பல வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் மெல்ல இங்கு கடை விரிக்கும் போக்கு பெருகியுள்ளது. “மேக் இன் இண்டியா” கல்வித்துறையில் பலமாக வெற்றிப் பெறும் எனத் தோன்றுகிறது. அது இந்தியர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதுதான் என் அவா. 


# வெளி நாட்டுக் கல்வி வாங்க விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வெளி நாட்டு பல்கலைக் கழகங்களும் இங்கு தொடங்கப்படுவதால் அயல் நாட்டு கல்வி அனுபவங்கள் இங்கு கிடைப்பதன் பலன் கல்விக்காக வெளிநாடுகளுக்குப் போவதைத் தடுக்குமா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். 

# ஆன்லைன் கல்வி முறை பிரபலமாகி வருகிறது. 2014- ல் மட்டும் இந்தியாவின் பல பெரிய பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் உலகமெங்கும் மாணவர்களை சேர்க்க ஆரம்பித்துள்ளன. Coursera போன்ற பன்னாட்டு முயற்சிகள் உலகின் எந்த பல்கலைக்கழக படிப்பையும் உங்கள் மடிக்கணினியில் இலவசமாகத் தருவது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 

எந்த அடிப்படையும் இல்லாமல் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம் எனும் வசதிதான் இதன் வெற்றிக்குக் காரணம். பாரம்பரியக் கல்வியின் குரல்வளையை ஆன்லைன் கல்வி நெரிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. 

#பெரியார் மிச்சம் வைத்த சீர்திருத்தத்தைத் தொழில்நுட்பம் செய்து முடிக்கும். சாதி, மத, வர்க்க பேதமின்றி அவர்கள் வசதிக்குக் கல்வி கற்கும் வசதி எல்லோருக்கும் வாய்க்கும் எனத் தோன்றுகிறது. கைப்பேசியில் மொபைல் கல்வி வலைதளங்கள் 2015-ல் பிரபலமாகலாம். 

# இன்றைய பள்ளி மாணவர்கூட “மாதா பிதா கூகுள் தெய்வம்” என்கிறார். பத்தாவது டியூஷன் போகும் மாணவர்கள் Khanacademy, Mertitnation வலைதளங்கள் சென்று அதிலும் படிக்கிறார்கள். ஆசிரியரை மீறி கற்கும் வாய்ப்பும் விபரீதமும் உள்ளன. 

# பழைய அதிகாரங்கள் இழந்த நிலையில் தன் பங்களிப்பையும் மதிப்பை யும் தக்க வைக்கும் முனைப்புகள்தான் தற்கால ஆசிரியர்களின் சவால்கள். 

# கடைசியாக, இந்தியா இந்த நிலையில் கல்வியை நிர்வகித்தால் 2060-ல்தான் 100 சதவீத எழுத்தறிவு சாத்தியப்படும் என்கிறது யுனெஸ்கோ.

 மக்கள் தொகை இருந்தும் கல்வி, திறன் வளர்ப்பு மற்றும் வேலைப்பயிற்சியில் நாம் தவறவிட்டால் அதன் அதிர்வுகள் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் தெறிக்கும். 

உயிரியலிலும் உயர் மதிப்பெண்

 

பிளஸ் 2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் அதிகமாகப் பதைபதைக்கும் பாடம், உயிரியல்தான். இழக்க வாய்ப்புள்ள ஒற்றை மார்க்கூட, ஒருவரின் மருத்துவ மேல்படிப்பு கனவை இற்று போகச் செய்யலாம் என்பதே இதற்குக் காரணம். 

அதே வேளையில் சரியான திட்டமிடல் மற்றும் முயற்சிகள் வாயிலாக, பெற்றோரின் பல லட்சங்களை விழுங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிக்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கவும் அதிகம் அடித்தளமிடும் பாடம் உயிரியல்தான். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் கே. ராஜேந்திரனும், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி விலங்கியல் முதுநிலை ஆசிரியை ஆர். அருட்ஜோதி ஆகியோர் உயிரியல் பாடத் தயாரிப்புக்கான குறிப்புகளை வழங்குகிறார்கள். 

சராசரி மாணவர்களுக்கு 
 
உயிரியலில் சராசரி மதிப்பெண்ணுடன் தேர்ச்சிக்கு முயலுபவர்களுக்கு விலங்கியலைவிட தாவரவியலே கைகொடுக்கும். தாவரவியல் மூலமே உயிரியல் தேர்ச்சியை முடிவு செய்யும் மாணவர்கள் அதிகம். இவர்கள், தாவரவியலில் 1 மற்றும் 5 ஆகிய 2 பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். 

தாவரவியலில் மொத்தம் எழுத வேண்டிய 7 மூன்று மார்க் கேள்விகளில் முதல் பாடத்திலிருந்து 2, பாட எண் 5-லிருந்து 3 என 5 கேள்விகளை எதிர்பார்க்கலாம். முதல் பாடத்திலிருந்தே 5 மார்க் கட்டாய வினா இடம்பெறும். மேலும் பாட எண் 2, 3லிருந்து படம் வரைவது சார்ந்த தலா ஒரு 3 மார்க் கேள்வி இடம்பெறும். 

புத்தகப் பின்பகுதி வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவற்றில் உரிய திருப்புதல் மேற்கொண்டாலே 14 ஒரு மார்க் கேள்விகளில் 10-க்கு பதிலளிக்கலாம். செய்முறை தேர்வுக்கான வினாக்களில் கூடுதல் கவனம் செலுத்தினால், அவற்றிலிருந்தே 6 சோதனைகள் தொடர்பான வினாக்களில் ஒரு 5 மார்க் நிச்சயம் வரும். விலங்கியலைப் பொறுத்தவரை சராசரி மாணவர்கள் 2,3,4 ஆகிய பாடங்களைப் படித்தால் மட்டுமே சராசரி மதிப்பெண்களை எட்டலாம். 

1+3 தயாரிப்பு 
 
தொடர்புபடுத்திப் படிப்பதும் ஒப்பிட்டுப் படிப்பதும் குழப்பத்தைத் தவிர்க்கும். உதாரணத்துக்கு அப்ஜெக்டிவ் டைப் 1 மார்க் கேள்விகளைப் படிக்கும்போது, சரியான 1 விடை தவிர்த்து இதர 3 விடைகளுக்கும் உரிய கேள்விகளை உருவாக்கிப் படிக்க வேண்டும். 

இந்த வகையில் ஒரே நேரத்தில் 4 ஒரு மார்க் கேள்விகளுக்குத் திருப்புதல் மேற்கொள்ளலாம். அதேபோல ஒரு 10 மார்க் கேள்விக்குத் தயாராகும்போது அதில் 3 அல்லது 4 மூன்று மார்க் கேள்விக்கான பதில்கள் உள்ளடங்கி இருக்கும். அவற்றையும் கவனத்தில்கொண்டு படிப்பது சிறப்பான தயாரிப்பாக அமையும். 

ஒரு மார்க் அள்ள 
 
பொதுவாகப் பாடங்களில் தடித்த எழுத்துகளில் இடம்பெறுவதை மையமாகக் கொண்டு 1 மார்க் தயாரிப்பை மேற்கொண்டால், பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிதாக எதிர்கொள்ளலாம். தாவரவியலில் வருடங்கள் மற்றும் குரோமோசோம் எண்ணிக்கை தொடர்பான ஒரு 1 மார்க் கேள்வியும், அறிவியல் அறிஞர் அவரது நாடு மற்றும் எழுதிய புத்தகம் இவற்றிலிருந்து 1 ஒரு மார்க்கும் நிச்சயம் வரும். 

இவற்றில் தவறுகளைத் தவிர்க்கப் பாடங்களில் இருந்து தகவல்களை ஒரு தொகுப்பாக உருவாக்கித் திருப்புதல் மேற்கொள்ளலாம். 6-வது பாடத்திலிருந்து 2 ஒரு மார்க் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுவதால், அவற்றுக்குக் கூடுதல் கவனம் தரவேண்டும். தாவரவியல் புத்தகத்தின் கடைசி 5 பக்கங்களின் பொருளாதார முக்கியத்துவம் என்ற தலைப்பிலிருந்து ஒரு 1 மார்க் நிச்சயம் வரும். 

பொதுவாகப் பாடங்களில் தடித்த எழுத்துகளில் இடம்பெறுவதை மையமாகக் கொண்டு 1 மார்க் தயாரிப்பை மேற்கொண்டால், பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிதாக எதிர்கொள்ளலாம். தாவரவியலில் வருடங்கள் மற்றும் குரோமோசோம் எண்ணிக்கை தொடர்பான ஒரு 1 மார்க் கேள்வியும், அறிவியல் அறிஞர் அவரது நாடு மற்றும் எழுதிய புத்தகம் இவற்றிலிருந்து 1 ஒரு மார்க்கும் நிச்சயம் வரும். இவற்றில் தவறுகளைத் தவிர்க்கப் பாடங்களில் இருந்து தகவல்களை ஒரு தொகுப்பாக உருவாக்கித் திருப்புதல் மேற்கொள்ளலாம். 

6-வது பாடத்திலிருந்து 2 ஒரு மார்க் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுவதால், அவற்றுக்குக் கூடுதல் கவனம் தரவேண்டும். தாவரவியல் புத்தகத்தின் கடைசி 5 பக்கங்களின் பொருளாதார முக்கியத்துவம் என்ற தலைப்பிலிருந்து ஒரு 1 மார்க் நிச்சயம் வரும். 

விலங்கியலில் 1 மார்க்கைப் பொறுத்தவரை 7 பாடங்களையும் படித்தாக வேண்டும். 16 கேள்விகளில் 4 முதல் 6 ஒரு மார்க் மட்டுமே புத்தக வினாக்களில் இருந்து வரும். இதர கேள்விகள் புத்தகத்தின் உள்ளிருந்தே இடம்பெறும். 

குழப்பம் தவிர்ப்போம் 
 
உயிரியலில், ஒரு தேர்வு 2 விடைத்தாள்கள் என்பதிலேயே சிலருக்குப் பதட்டம் இருக்கும். தாவரவியலில் 7 மூன்று மார்க், 4 ஐந்து மார்க் வினாக்கள் இடம்பெறும். இதுவே விலங்கியலில் 8 மற்றும் 3 என அமையும். இந்தச் சாய்ஸ் வினாக்களின் எண்ணிக்கையில் அவசரத்தில் மறந்து, இரண்டுக்குமிடையே சிலர் மாற்றி எழுதிவிடுவார்கள். இந்தத் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் அவற்றைத் தவிர்க்கலாம். 

தேர்வறையில் வழங்கப்படும் வினாத்தாள் வாசிப்பதற்கான நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி, குழப்பம் மற்றும் நேர விரயத்துக்கு வாய்ப்பில்லாத கேள்விகளைத் தேர்வு செய்வது ஒரு கலை. திருப்புதல் தேர்வுகளில் இதிலும் உரிய பயிற்சி பெறுவது நல்லது. 

தாவரவியல் பாட எண்-5ல் ’எலெக்ட்ரான் கடத்து சங்கிலி’ வினாவை அது தொடர்பான பிற வினாக்களுடன் மாணவர்கள் குழப்பிக் கொள்வார்கள். 

3 மார்க்கில் இரு சொல் பெயரிடும் முறை, பல சொல் பெயரிடும் முறை ஆகியவற்றின் பதில்களை மாற்றி எழுதும் குழப்பமும் இதில் சேரும்.
முதல் பாடத்தில் இடம்பெறும் 4 குடும்பங்கள் தொடர்பான 10 மார்க் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ஒரு பாயிண்ட் குறைவாக எழுதுவதைவிட, குடும்பங்கள் இடையேயான பாயிண்ட்களை மாற்றி எழுதுவதால் மார்க் இழப்பு ஏற்படும். 

அதேபோலப் படங்களை வரையும்போது ஒன்றிரண்டு பாகங்கள் குறிக்காது விட்டால்கூடப் பிரச்சினையில்லை. ஆனால், தவறாகக் குறிப்பதோ அல்லது கோடிட்டுவிட்டு அது குறித்து எழுதாமல் விடுவதோ நிச்சயம் மதிப்பெண் இழப்பை ஏற்படுத்தும். 

தாவரவியல் முதல் பாடத்தில் பொருளாதார முக்கியத்துவம் தலைப்பின் கீழ் விடையளிக்கையில் தாவரவியல் பெயர் மறந்தாலோ, குழம்பினாலோ வட்டாரப் பெயர்களை எழுதி மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம். 

நேர விரயம் தவிர்க்க 
 
படம் வரைவதில் அதிக நேர விரயமாவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகத் தாவரவியலில் குடும்பங்கள் தொடர்பான கேள்விக்கு மலரின் வரைபடம் வரைந்தால் போதும். 

அது தொடர்பான ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை வரைந்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. 5 மார்க்கைப் பொறுத்தவரை படம் உண்டென்றால், வினாவில் கேட்காவிட்டாலும் வரைந்தாக வேண்டும். 

3 மார்க்கில் படம் குறித்துக் கேட்டால் மட்டுமே படம் வரைய வேண்டும். 


’விவரி, என்றால் என்ன?, குறிப்பு வரைக...’ ஆகிய கேள்விகளுக்கு மட்டுமே வாக்கியங்களில் விடையளிக்கலாம். மற்றபடி கேட்ட கேள்விக்கான பதில் என்னவோ, அதை ஒரு சில வார்த்தைகளில் எழுதி முடிப்பது நேர விரயத்தைத் தவிர்க்கும். தாவரவியல், விலங்கியல் பெயர்களைப் படிப்பதோடு எழுதியும் பார்க்க வேண்டும். 


ஒப்பீட்டளவில் தாவரவியல் எளிது என்பதால், அதை விரைவாக முடித்துவிட்டு மிச்சமாகும் நேரத்தை விலங்கியலுக்கு அளிக்கலாம். ஆனால், திருப்புதல் தேர்வுகளில் இதைத் தவிர்த்துவிட்டு 1.30 மணி நேரத்தில் விலங்கியலை முடிக்க முயற்சிக்கலாம். 1 மற்றும் 3 மார்க்குக்கு அரை மணி நேரம், 5 மற்றும் 10 மார்க் பகுதிகளுக்குத் தலா அரை மணி நேரம் எனப் பயிற்சியில் முயற்சிக்க வேண்டும்

அக்ரோனிம் அறிவோம்

 
 
 
ஆங்கிலத்தில் பல தொடர் வார்த்தைகளின் முதல் எழுத்துகளை வைத்து உருவாகும் வார்த்தை , ஒரு தனி வார்த்தையாக உருவானால், அது அக்ரோனிம் (ACRONYM) எனப்படும் . உதாரணமாக, AIDS என்பது Acquired Immuno Deficiency Syndrome என்ற வார்த்தைகளின் மூலம் உருவானது. 

அதே போல NEWS என்ற பிரபல வார்த்தை, North East West South என்று திசைகளை வைத்து உருவானதே. இதோ மேலும் சில அறியாத அக்ரோனிம்கள். 

CHESS - Chariot, Horse, Elephant , Soldiers
JOKE - Joy Of Kids Entertainment
AIM - Ambition in Mind
DATE - Day and Time evolution
EAT - Energy and Taste
PEN - Power enriched in Nib
SMILE - Sweet memories in lips expression
BYE - Be With you Everytime

தன் விவரமா, வாழ்க்கைப் போக்கா? - ஆங்கிலம் அறிவோமே

 
 
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றி “அவர் ரொம்ப shrewd’’ என்று பேசிக் கொள்கிறார்களா? அப்படியானால் நீங்கள் பாராட்டப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நிறைய presence of mind இருக்கிறது. புத்திசாலித்தனம், விழிப்புணர்வு இரண்டும் கொண்டவர் நீங்கள். 

ஆனால் நீங்கள் ஒரு பெண்மணியாக இருந்து யாராவது உங்களை shrew என்று கூறினால் (முன்பு குறிப்பிட்ட வார்த்தையின் கடைசி எழுத்து இல்லை என்பதைக் கவனியுங்கள்) “ரொம்ப தாங்க்ஸ்’’ என்று அசட்டுத்தனமாகச் சொல்லி விடாதீர்கள். அது எதிர்மறை அர்த்தத்தை அளிக்கும் வார்த்தை. கொஞ்சம் ராட்சசத்தனமான, எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் பெண்மணியைத்தான் shrew என்பார்கள். 

Shrewd, shrew ஆகிய வார்த்தைகளைக் குறிப்பிடும்போது விநாயகரின் வாகனமும் நினைவுக்கு வருகிறது. ஏன் என்பதைக் கூற முடியுமா? விடையைப் பிறகு உறுதி செய்து கொள்ளலாம். 

வித்தியாசம் 
 
இளைஞர்கள் பலருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் உண்டாகி இருக்கக் கூடிய ஒரு சந்தேகம் இது. Bio-data, C.V, Resume ஆகிய மூன்றும் ஒன்றுதானா? அப்படியில்லை என்றால் அவற்றுக்கிடையே என்ன வித்தியாசம்?
Bio-data என்பது Biographical data என்பதன் சுருக்கம்.

இதில் தன்னைப் பற்றிய விவரங்களை ஒருவர் பதிவுசெய்து கொள்வார். பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி, நாடு போன்ற விவரங்களும் இவற்றைத் தொடர்ந்து கல்வி மற்றும் பணி தகுதிகள் ஆகியவை வருட வாரியாகவும் இடம் பெறும். 

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க, ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாம் அளிப்பதெல்லாம் bio-dataதான். என்ன, அச்சிட்ட தாள்களில் தேவைப்படும் விவரங்களைக் கேட்கிறார்கள், நிரப்புகிறோம், அவ்வளவுதான். 

C.V என்பதன் விரிவு Curriculum Vitae. இவை லத்தீன் வார்த்தைகள். “வாழ்க்கைப் போக்கு’’ (Course of life) என்பது இதன் பொருள். 

Resume என்பது ஒரு பிரெஞ்ச் வார்த்தை. இதன் பொருள் summary என்பதாகும்.
பொதுவாக C.V என்பதும் Resume என்பதும் ஒன்றுதான். ஆனால் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. 

Resume என்பது அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் கொண்டதாக இருக்கும். இதிலுள்ள குறிப்புகள் ஏதோ மூன்றாவது மனிதரைப்பற்றி விவரிப்பதுபோல் இருக்கும். (Has secured first rank, Has participated in the cultural events என்பதுபோல). 

C.V என்பது தேவைக்கேற்ப அதிகப் பக்கங்களைக் கொண்டதாக அமையலாம். நான்கு பக்கங்கள்கூட இருக்கலாம். கல்வி, பணி அனுபவங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் விவரிக்கப்படும். 

எப்போது C.V.? எப்போது Resume? 
 
C.V என்பது உங்களைப் பற்றிய பொதுவான கருத்தை உருவாக்கப் பயன்படுகிறது. Resume என்பது குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் எவ்வளவு தகுதியானவர் என்பதை உணர்த்தும் முயற்சி. 

வீட்டிலும் சிங்கம் 
 
விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. மூஞ்சூறுக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை? Shrew என்பதுதான். (Rat, Mouse ஆகியவை எலியைக் குறிக்கின்றன).
பெருச்சாளிக்கு ஆங்கிலத்தில் என்ன? கார்ட்டூனில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். 

கார்ட்டூனுக்கான ஐடியாவை உருவாக்கியபோது நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது. அதைக் கொஞ்சம் மாற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே. 

தன் அலுவலகச் சகாக்களிடம் ஒருவர் “நான் valiant, valorous, intrepid, audacious’’ என்றாராம். அதைக் கேட்ட ஒருவர், “சார் நீங்க ஆபீஸிலே சிங்கம்தான், வீட்ல எப்படி?’’ என்றாராம். அதற்கு அவர் “வீட்டிலும் நான் சிங்கம்தான்’’ என்று கூறிவிட்டு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “ஆனால் என் மனைவி துர்க்கை. 

என்மேலே உட்கார்ந்து அதிகாரம் பண்ணுவாங்க’’ என்றாராம். (அவர் தன்னைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டுக்கொண்ட நான்கு ஆங்கில வார்த்தைகளும் துணிவைக் குறிக்கின்றன என்பதை இந்நேரம் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்). 

சிவபெருமானின் வாகனம் எது? உங்கள் விடையை ஆங்கிலத்தில் கூற வேண்டும்.. 
 
பசுவும் எருமையும் 
 
அதற்கு முன்னால் Cow என்றால் என்ன? Buffalo என்றால் என்ன? Ox என்றால் என்ன? Bull என்றால் என்ன? Bullock என்றால் என்ன? சொல்லுங்கள். 

(இப்போது சிலருக்குச் சின்னதாக ஒரு குழப்பம் வந்திருக்கலாம் கடைசி மூன்றில் எது சிவனின் வாகனம் என்று). 

முதலில் cow என்றால் எது என்பதைத் தெரிந்து கொண்டுவிடுவோம். இதென்ன அசட்டுத்தனம், cow என்றால் பசுமாடுதானே என்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். வளர்ச்சி முழுமையடைந்துவிட்ட பல பெரிய பெண் விலங்குகளை cow என்று குறிப்பிடுவதுண்டு. 

வளர்ச்சியடைந்த பெண் யானை, பெண் திமிங்கிலம் ஆகியவற்றையும்கூட cow என்பதுண்டு. சந்தேகம் எதற்கு என்பதற்காக cow elephant, cow whale என்றும் சிலர் கூறுவார்கள். 


Buffalo என்றால் எருமை. 

எருது என்றால் என்ன? உங்கள் பதில் Ox என்பதா? Bull என்பதா? அல்லது இரண்டு வார்த்தைகளும் சரிதான் என்பதா? (குழப்பம் அடைபவர்கள் கவலைப்பட வேண்டாம். சின்ன வயதில் எருமையை ஆண் என்றும் பசுவைப் பெண் என்றும் அப்பாவித்தனமாக எண்ணியவர்கள் உண்டு. அப்படிக் கூடவா இருப்பார்கள் என்று கேட்காதீர்கள். 

Ox என்றால் மாடு. மாட்டு வண்டியில் பூட்டப்படுவது oxதான். (Ox என்பதன் பன்மை Oxen). ஆஸ்திரேலியாவில் (இந்தியாவிலும் கூடத்தான்) இதை bullock என்பார்கள். Bullock cart என்றால் மாட்டு வண்டி. நிலத்தை உழப் பயன்படும் எருது என்பதும் oxதான். 

பெரும்பாலும் ox எனும் விலங்கின் இனப்பெருக்கச் சக்தியை மருத்துவத்தின் மூலம் நீக்கிவிடுவது வழக்கம். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமாம். 

Bull என்பது காளை. Bison என்றும் கூறுவார்கள். ஸ்பெயினில் புகழ்பெற்ற Bull fighting என்ற விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? ஜல்லிக்கட்டும்தான். ஆகச் சிவனின் வாகனம் bullதான். 

இன்னமும் விளங்காதவர்கள் ‘ஆ’ என அலறலாம். அல்லது ‘கோ’ என்று கண்ணீர் விடலாம். ஆனால் ஆ, கோ என்ற தமிழ் வார்த்தைகள் பசுவை மட்டும் குறிக்கிறதா? அல்லது பால் தரும் விலங்கு எதையும் குறிக்கிறதா என்று கேட்டுவிடாதீர்கள்.

ஆசிரியரை கேள்வி கேட்கலாமா?

 
 
காப்பிய நாயகரான ராமரின் குரு விசுவாமித்திரர். அர்ஜுனனுக்கு துரோணர். மாவீரன் அலெக்சாண்டருக்கு அரிஸ்டாட்டில். இவர்கள் அனைவரும் முக்கியத்துவம் பெற அடிப்படைக் காரணம் குரு - சிஷ்யன் உறவு.
ஆசிரியர்கள் உலகின் வழிகாட்டிகள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது, நமக்குத் துணை நிற்கும். 

ஆசிரியர்களிடம் பயத்தை விட்டொழிக்க வேண்டும். கேள்வி கேட்பது சந்தேகத்தை வெளிப்படுத்தவும், பதில் சொல்வது ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை உணர்த்தும். 

ஆசிரியரிடம் பேசுவதற்கு முன்பாக பேச இருக்கும் விஷயத்தை நன்கு யோசித்து, அதன் விளைவுகளையும், தெரிந்துகொண்டு அணுகலாம். பேசுவதற்கான நல்ல சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விஷயத்தைப் பொறுத்து வகுப்பறையிலோ, ஆசிரியர்களுக்கான அறையிலோ பேசலாம்.
எந்தச் சூழ்நிலையிலும் பொய் பேசக்கூடாது. இயல்பாக இருக்க வேண்டும். நல்ல பெயர் வாங்க குணாதிசயங்களைச் செயற்கையாக மாற்றிக் கொள்ளக்கூடாது. 

அவர் உங்களை விமர்சனம் செய்தாலோ அல்லது குறைகூறினாலோ தவறாக நினைக்க வேண்டாம். ஒரு மாணவனைப் பற்றியோ மற்ற ஆசிரியர்களைப் பற்றியோ குறை கூற வேண்டாம். 

நேற்று நடத்திய பாடங்களைப் பற்றி ஆசிரியர் கேட்கும்போது எதைப் புரிந்து கொண்டீர்கள், எது உங்களுக்குச் சவாலாக அமைந்தது என்று கூறுங்கள்.
உங்களுடைய கண், உடல் மொழி அவரிடம் பேசுவதில் உள்ள அக்கறையை வெளிப்படுத்த வேண்டும். 

அதேபோல நீங்கள் கையாள்கிற மொழியில் சிக்கல் இருக்கலாம். எந்த மொழியில் பேசப் போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருங்கள். உங்களுடைய நடை, உடை, பேச்சு, பாவனை எல்லாமே படிப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம் என்று வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். 

நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றியது ஆசிரியர்கள்தான். பெரும் தலைவர்கள் பெரும்பாலோர் ஆசிரியர்களே. அது மட்டுமல்ல, உங்களுடைய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது நீங்களும் ஆசிரியர்கள்தான்.

Thursday, 1 January 2015

“ஷார்ப்” பரப்பும் மென்திறன்

 
 
கல்வியில் கில்லியாக இருந்தாலும், வேலைவாய்ப்பு என்று வரும்போது தென்மாவட்ட இளைஞர்கள் பின்தள்ளப்பட்டு விடுகிறார்கள். இதை உணர்ந்து இப்போது தென்மாவட்டப் பொறியியல் கல்லூரிகளில் எல்லாம் தகவல் தொடர்பு திறன்களைக் கற்றுத்தர ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், கலை அறிவியல் பயிலும் மாணவர்களின் கதி? 

இவர்களுக்காகவே தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் சார்பில் மதுரையில் தொடங்கப்பட்ட அமைப்புதான் ஷார்ப். 5 ஆண்டுகளுக்கு முன்பு கலைக் கல்லூரிகள் தோறும் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்த இந்த அமைப்பு, இப்போது முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று கெடுபிடி காட்டும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. 

இதனை வெற்றிகரமாக சுபப்ரியா பிரபாகரன் ஒருங்கிணைத்து வருகிறார். “பொதுவாகக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறுவதற்கான பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, வேலையில் முன்னேறவோ, தொழில், வணிகத்தில் ஈடுபடவோ கற்பிக்கப்படுவதில்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கி, மாணவர்களின் ஆற்றலைக் கூர்மைப்படுத்தத்தான் இந்த ஷார்ப் மையம் தொடங்கப்பட்டது” என்கிறார் அவர். 

“ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவுகிற முக்கியமான விஷயங்களாக வரையறுக்கப்பட்டுள்ள கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், தன்னை அறிதல், தெளிவான இலக்கை நிர்ணயித்தல், குழு மனப்பான்மை, நேர மேலாண்மை, மற்றவர்கள் இடத்தில் வைத்துத் தன்னைப் பாவித்தல், மற்றவர்களைப் பாராட்டுதல், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, உணர்ச்சிகளையும், கோபத்தையும் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தருகிறோம்” என்றும் தெரிவிக்கிற அவர், இந்தக் கருத்துகளைத் தங்கள் அனுபவங்களில் இருந்தே எடுத்துச் சொல்லக்கூடிய தொழில்துறையினர், வெற்றியாளர்கள் போன்ற ஆளுமைகளை அழைத்துப் பேச வைக்கிறோம். 

இக்கருத்துகளை எல்லாம் சுவாரஸ்யமாகக் கற்றுத் தரும் வகையில் ஞாநி, லேனா தமிழ்வாணன், சோமவள்ளியப்பன், வரலொட்டி ரங்கசாமி, மனுஷ்யபுத்திரன் போன்ற பல எழுத்தாளர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த அமைப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மதுரையில் 1200 கல்லூரி மாணவர்களுக்கும், 3000 பள்ளி மாணவர்களுக்கும் மென்திறன் பயிற்சி அளித்துள்ளோம்” என்று பெருமிதம் கொள்கிறார். 

இந்த அமைப்பைத் தென்மாவட்டங்கள் முழுக்க விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டபோது, “பள்ளி, கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் இந்த மென்திறன் பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். மதுரை மாவட்டத்தில் 9, 10- ம் வகுப்பு படிக்கும் மாணவிகளே சுமார் 2 லட்சம் பேர் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் என்னுடைய இப்போதைய இலக்கு” என்கிறார் சுபப்ரியா பிரபாகரன்.

மாயச் சதுரங்கள்

 
 
மாயச் சதுரங்கள் பன்னெடுங்காலமாக மனிதனின் சிந்தனையைக் கவர்ந்துள்ளன. குறிப்பாக, 4X4 மாயச் சதுரத்தில் பல மாயங்களைக் காணுவதில் பலரும் தம் பொழுதை மகிழ்வுடன் அன்றும் கழித்தார்கள், இன்றும் கழிக்கின்றனர். சீனிவாச இராமனுஜம் பிறந்த நாளை மையப்படுத்திய மாயச் சதுரமும், அதனை உருவாக்க இராமானுஜனே அளித்த வழிமுறையும் பலரையும் கவர்ந்தது வியப்பல்ல. தம் பிறந்த நாள், ஒரு நிகழ்ச்சி நடைபெறும் நாள் போன்றவற்றுக்கு மாயச் சதுரம் அமைக்கும் பழக்கமும் பரவலாகிவிட்டது. 


உற்று நோக்குக: 22+87= 27+82; 12+18= 4+26; 22+26= 16+32; 4+87= 84+7; 22+4= 2+24; 87+26= 21+92. 

இந்த மாயச் சதுரம் அமைக்கப்பட்ட முறை புரிந்திருக்கும்.உங்கள் பிறந்த நாளுக்கு ஒரு மாயச் சதுரம் அமைத்துப் பெருமை கொள்க. 

சதுரங்களின் வகைகள் 
 
இக்கட்டுரையில் 3X3 மற்றும் 5X5 மாயச் சதுரங்கள் அமைப்பது பற்றிப் பார்ப்போம். 


மேற்கண்ட மூன்று அமைப்புகளில் நிரை, நிரல் மற்றும் மூலைவிட்டங்களில் அமைந்துள்ள எண்களின் கூடுதலைத் தனித் தனியாகக் காணவும். 

முதலாவதில் எல்லாம் 15-க்குச் சமமாக இருப்பதைக் காணலாம். இது ஒரு முழுமையான மாயச் சதுரமாகும். 

இரண்டாவதில் நிரல், நிரை கூடுதல்கள் 15. ஆனால் மூலைவிட்டக்கூடுதல் 15 அல்ல. இது ஒரு சாதாரண மாயச் சதுரம். 

மூன்றாவதில் நிரல், நிரை மற்றும் ஒரு மூலைவிட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் 15. ஆனால் மற்றொரு மூலைவிட்டத்திலுள்ள எண்களின் கூடுதல் 15 அல்ல. இதனைக் குறை மாயச் சதுரம் எனலாம். 

இன்னும் பலவிதமாக 1 முதல் 9 வரையுள்ள எண்களைக் கட்டங்களில் நிரப்பலாம். நிரப்பிப் பாருங்கள். என்ன காண்கின்றீர்கள்? மற்றொரு முழுமையான மாயச் சதுரத்தைக் கண்டீர்களா?
கீழே 5X5 மாயச் சதுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றில் 1 முதல் 25 வரையுள்ள எண்கள் கட்டங்களில் நிரப்பப்பட்டுள்ளன. நிரல், நிரை, மூலைவிட்டங்களில் உள்ள எண்களின் கூடுதல்களைக் காண்க. முதலாவது முழுமையான மாயச் சதுரமாக அமைந்துள்ளது. இதனைச் சிறிது உற்றுப்பார்க்கவும். 1 எங்கே உள்ளது, 2 எந்தக் கட்டத்தில் உள்ளது. 

மூலைவிட்டதிசையில் சென்றாலோ அல்லது ஒரு கட்டம் வலப்புறம் சென்று ஒரு கட்டம் மேலே சென்றால் 2-யின் இடத்தை அடைகின்றோம். 

அதே விதியைப் பயன்படுத்தி 3,4,5 ஆகியவற்றை உரிய கட்டங்களில் நிரப்பப்பட்டுள்ளன. 6 அதே முறையில் செல்ல இயலாது தடுக்கப்பட்டுள்ளது. எனவே 6-ஐ 5-க்குக் கீழேயுள்ள கட்டத்தில் இட்டு 7,8,9,10 ஆகியவற்றை மூலைவிட்டத் திசையில் நிரப்பப்பட்டுள்ளன. 11 இடத்தில் 6 உட்கார்ந்திருக்கின்றது. எனவே 11-ஐ 10-க்குக் கீழே உள்ள கட்டத்தில் இட்டுத் தொடர்கின்றோம். இவ்வண்ணம் 25 எண்களையும் கட்டங்களில் நிரப்பியாகிவிட்டது. 

1-ஐ வெவ்வேறு கட்டங்களில் அமைத்து இதே மூலைவிட்ட விதிப்படி பிற எண்களை நிரப்பிப் பார்க்கலாம் இரண்டாவது படத்திலுள்ளது அவ்வாறு ஓன்று. இது ஒரு குறைபட்ட முழுமாயச் சதுரமாக அமைந்துள்ளது. இதே ஆட்டத்தைத் தொடருங்கள். நல்ல பொழுதுபோக்கு. எவை மாயச் சதுரங்களை உருவாக்குகின்றன, எவை முழுமையான மாயச்சதுரமாகும், எவை குறைபட்ட முழுமாயச் சதுரமாகும். 

மூன்றாவது படத்தில் எண்கள் தாவுவதில் ஒரு சிறு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. மூலைவிட்ட திசையில் செல்லாது, சதுரங்க அட்டையில் குதிரையின் நகர்வு போன்று எண்கள் தத்தித் தாவிச் செல்கின்றன. குதிரை நான்கு கட்டங்களுக்குச் செல்லும். நாம் ஒரு முறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இப்படத்தில் ஒரு கட்டம் வலப்புறமாகச் சென்று இரண்டு கட்டம் மேலே செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோம். இது மாயச் சதுரமா? ஆம் என்றால் எத்தகைய மாயச் சதுரம்? இதேபோல வெவ்வேறு கட்டங்களில் தொடங்கியும். குதிரையில் பிற தாவல்முறைகளிலும் எண்களை அமைத்து 25 கட்டங்களை யும் நிரப்பலாம். எல்லாம் மாயச் சதுரங்களா? சோதித்துப் பாருங்கள். 

இதே விதியின்படி 7X7, 9X9 போன்ற ஒற்றைப்படை மாயச் சதுரங்களை உருவாக்கலாம். பொழுதுபோகவில்லை என்ற குறையே இருக்காது. எண்கள் எங்கள் நம் உற்ற நண்பர்களன்றோ!!

ஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி?

 
 
மொழிப்பாடங்களில் ஒப்பீட்டளவில் தமிழை விட எளிமையானது ஆங்கிலம். தமிழ் அளவுக்கு மெனக்கெடல் ஆங்கிலத்தில் தேவையில்லை. ஆங்கிலத்தை ஊன்றிப் படிப்பவர்களால் இதை உணர முடியும். 

கை கொடுக்கும் 
 
தொழிற்கல்விக்கான கட் ஆஃப் மதிப்பெண்களில் பலர் ஒரே புள்ளிகளைப் பெறும்போது, பிறந்த தேதிக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில் எடுக்கும் மதிப்பெண் முன்னுரிமையாகக் கொள்ளப்படும். அதனால், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற உழைப்பார்கள். கட்டுரை மற்றும் பாராகிராஃப் அளவான விடைகளைத் தரவேண்டிய வினாக்கள் தவிர இதர பகுதிகளில் மதிப்பெண்களைக் குறைப்பதற்கு அதிக வாய்ப்பேயில்லை. எனவே கூடுதல் மதிப்பெண்களைக் குவிக்க ஆங்கிலமே அதிகம் கைகொடுக்கும். 

சராசரியானவர்கள், சிறப்பிடம் பெறுபவர்கள் என சகல மாணவர்களுக்கும் பயனளிக்கும் குறிப்புகளை இங்கே வழங்குகிறார், புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில முதுகலையாசிரியர் எம்.சலீம். 

பொதுவானவை
 
ஆங்கிலத்தின் 2 தாள்களையும் பொறுத்தவரை, நேரம் தாராளமாக இருக்கும் என்பதால், அனைத்துப் பகுதிகளிலும் நன்றாகத் திட்டமிட்டு எழுதி, சரிபார்த்தாலே அதிக மதிப்பெண்கள் பெறலாம். தேர்வின் தொடக்கத்தில் கிடைக்கும் 15 நிமிடங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலானோர் தான் படித்த கேள்விகள் வந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு சரி, முழு வினாத்தாளையும் படிப்பது இல்லை. அப்படிப் படித்துத் பார்த்தால் கவனக்குறைவால் நிகழும் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் இழப்பைத் தடுக்கலாம். கவனக்குறைவால் கட்டுரைகள் மற்றும் பாராகிஃராப் அளவிலான விடைகளை மாற்றி எழுதிவிடுவார்கள். E.R.C-ல் Poem அடையாளம் காண்பதில் அலட்சியம் காரணமாக மதிப்பெண்களை இழக்க நேரும். 

Presentation மற்றும் கையெழுத்தில் கவனம் செலுத்துவது , மொழிப்பாடத்துக்கு மிகவும் முக்கியம். இடமில்லை என்று வாக்கிய முடிவில் ஒரு வார்த்தையை உடைத்து, அடுத்த வாக்கியத்தின் தொடக்கமாக எழுதுவது கூடாது. பக்கத்தின் கடைசியில் ஒரு சில வரிகள் எழுதவே இடம் இருக்கிற நிலையில் புதிய பிரிவுக்கு விடை எழுத ஆரம்பிப்பதைவிட, கால் பக்கத்துக்குக் குறைவான அந்த இடங்களை பென்சிலால் அடித்துவிட்டு அடுத்த பக்கத்தில் எழுதுவது நல்லது. படிப்பது, எழுதிப் பார்ப்பது போன்ற பயிற்சிகள் மூலமே ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளை தவிர்க்க முடியும். சரியான கேள்வி எண்ணைக் குறிப்பிட்டிருக்கிறோமா என்று தேர்வின் இறுதியில் சரிபார்க்க வேண்டும். 

முதல்தாள்- குறிப்புகள் 

முதல் 10 வினாக்கள் Synonyms, Antonyms போன்ற ஒரு மதிப்பெண் வினாக்களில் அனைவரும் முழு மதிப்பெண்களைப் பெறலாம். இதற்கு ஒவ்வொரு பாடத்தின் முடிவில் இருக்கும் Glossary-யைத் தொடர்ந்து படித்து வருவதும், முந்தைய தேர்வு வினாத்தாள்களில் பயிற்சி பெறுவதுமே போதும். அடுத்த 10 வினாக்கள், தலா 2 மதிப்பெண்ணுடன் 20 மதிப்பெண்களைத் தரக்கூடிய, எளிமையான ஆங்கில இலக்கணம் பற்றிய வினாக்கள். 

இதில் மதிப்பெண் இழப்பது, அலட்சியம் காட்டுபவர்களுக்கு மட்டுமே நேரும். கேள்வி எண் 13-ல் Abbriviations, Acronym ஆகியவற்றில் எழுத்துப் பிழை அதிகம் வரும் என்பதால் சராசரி நிலையில் உள்ள மாணவர்கள், அவற்றை சாய்ஸில் விடலாம். கே.எண் 23-ல் Clipped word மற்றும் Sentence என 2ஐயும் எழுத மறப்பது பெரும்பாலானோரின் வாடிக்கையாக இருப்பதால், அதில் கவனம் அதிகம் இருக்கட்டும். இந்த 2 மார்க் வினாக்களிலும் முழு மதிப்பெண்கள் பெற பாட இறுதியில் இருக்கும் பயிற்சிகளை அவ்வப்போது திருப்புதல் மேற்கொண்டாலே போதும். 

கீழ் வகுப்புகளில் இருந்தே அடிப்படையான ஆங்கில இலக்கணத்தில் தேர்ந்தவர்கள், அடுத்த 10 வினாக்களுக்கும் எளிதில் முழு மதிப்பெண்கள் பெறலாம். மற்றவர்களுக்குச் சற்றுக் கூடுதல் பயிற்சி தேவை. கே.எண் 36, 37,38 ஆகியவற்றில் முழு மதிப்பெண்கள் பெற பாடநூலில் 294 -297 பக்க பயிற்சிகளில் தேறினாலே போதும். அதிக மதிப்பெண்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்பகுதிகளில் கவனம் வேண்டும். பிரிவு C-ன் 15 மதிப்பெண்களைப் பெற, வாசித்து அர்த்தம் புரிந்தாலே போதும், முழு மதிப்பெண்கள் பெறலாம். 

அடுத்ததாக Poem (20மார்க்) பிரிவில் கெய்டுகளை விட, சொந்தமாக ஒரு நோட்டில் தனக்கான வகையில் தயார் செய்து அவற்றை கெய்டாகப் பாவிப்பது மதிப்பெண்களை அள்ளித்தரும். E.R.C தலா 3 மதிப்பெண் கேள்வியில், Poem மற்றும் Poet பெயர் எழுதினாலே 2 மதிப்பெண் கிடைக்கும். விரிவாக எழுதுபவர்களுக்கு கூடுதலாக 1 மதிப்பெண்தான். Poem அடையாளம் காண, ஆசிரியர் சொல்லித்தரும் Key words களை நினைவில் நிறுத்தப் பழகுங்கள். 

2-ம் தாள்- குறிப்புகள்
 
2-ம் தாளில் 20 மதிப்பெண்களுக்கு (Aural and Oral skills) திட்டமிட்டுத் தயாராவதன் மூலம் 80 மதிப்பெண்களையும் எளிதாக வசமாக்கலாம். தேர்வுத்தாள் திருத்துபவர் விடையின் கூறுகளுக்குத் தனி மதிப்பெண்களை வழங்குவார் என்பதால், உள்ளடக்கம் சுமாராக எழுதினாலும் தொடக்கம் முதல் முடிவு வரை, ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி விடைக்கான கூறு நிலைகளைச் சரியாக அதன் வரிசைப்படி எழுதுவதன் மூலமே மதிப்பெண்களை அள்ளலாம்.
7 துணைப்பாடங்கள்(Non-details) உள்ளடங்கிய பாடங்களை ஆசிரியர் நடத்தும்போதே நன்றாகக் கவனித்துக், கதைகளை அதன் நிகழ்வுகள், பெயர்களோடு உள்வாங்கியிருந்தாலே போதும், சராசரி மாணவர்களுக்குக் கூட மதிப்பெண்கள் உத்திரவாதம் உண்டு. 25 மதிப்பெண்களுக்கான பிரிவு ஏ-க்கு கட்டுரை தவிர்த்து, ஏனையவற்றில் இந்த வகையில் மதிப்பெண் பெறலாம். பிரிவு-B Study Skills-ல் சிறு கவனக்குறைவால் மதிப்பெண்களை இழப்பார்கள். உதாரணத்திற்கு இமெயில் குறித்த பதிலில் வெப்சைட் எழுதுபவர்கள் அதிகம். இதே பிரிவில் வரும் spot the errors, 5 மதிப்பெண்களையும் அடிப்படை இலக்கண அறிவுடன் எளிதில் அள்ளலாம்.
பிரிவு C-ல் 5 மதிப்பெண்ணுக்கான Summary Writing பதில் எழுதுகையில் Title, Rough copy, Fair copy ஆகிய கூறுகளை முன்வைப்பதன் மூலமே 4 மார்க் பெற்றுவிடலாம். அதே போல அடுத்து வரும் 10 மார்க்கிற்கான Wanted (கே.எண்:24)கேள்வியிலும் From, to, Salutation, Body, Biodata கூறுகள் மூலமே 10 மார்க் பெற்றுவிடலாம். அடுத்த 15 மார்க்கிற்கான பிரிவு D-யிலும் (Non-Lexical Fillers மற்றும் Road map)ஓரளவு பொது அறிவோடு அணுகினால் போதும். 

கட்டுரைகள் கவனம்:
 
சராசரி மாணவர்கள் தவிர்ப்பதும், நன்றாகப் படிப்பவர்கள் சறுக்குவதுமான கட்டுரை பகுதிக்குத் தனிக்கவனம் வேண்டும். முதல்தாளில் பிரிவு டி, ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைக்க வாய்ப்புள்ள கட்டுரை மற்றும் பாராகிஃராப் அடங்கியது. இதில் ஆங்கில வழி மாணவர்கள் கூட சுலபமாக மதிப்பெண் இழப்பார்கள். அலட்சியம், அவசரம் ஆகியவற்றாலே பிழைகள் நேர வாய்ப்புள்ளது என்பதால், சொந்தமாக எழுதுவதைத் தவிர்க்கலாம்.
அப்படிச் சொந்தமாக எழுதுவதாக இருப்பின், முன்பே தயார் செய்ததை ஆசிரியரிடம் சரிபார்த்த பிறகு அவற்றைப் படித்து எழுதுவது சிறப்பு. சொந்த வார்த்தைகளைவிட, பாடத்தின் சொற்களஞ்சியத்தையே பின்பற்றலாம். இவை பிழைகளை தவிர்க்க உதவும். மேலும், முக்கிய இடங்களை வேறு நிற மையினால் (நீலம் அல்லது கறுப்பு) எழுதி வேறுபடுத்தி காட்டுவது, பென்சிலால் அடிக்கோடிடுவது, ஏற்கனவே பயிற்சி செய்த மேற்கோள்களை (Quotations)பயன்படுத்துவது ஆகியவை ஒன்றிரண்டு மதிப்பெண் இழப்பையும் தவிர்க்கும். 

நன்றாகப் படிப்பவர்கள், எல்லோரும் பதிலளிக்க வாய்ப்புள்ள முதல் பாட கேள்விகளை சாய்ஸில் விட்டு, இதர பாடங்களை எழுதுவது தனித்தன்மையைப் பறைசாற்றும். தாமதமாகத் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் முதல் 2 பாடங்களை மட்டுமே ஊன்றிப் படித்து கட்டுரை, பாராகிஃராப் வினாக்களை எதிர்கொள்ளலாம். பிரிவு E, poetry பகுதியில், 3-ல் 1 என சாய்ஸில் எழுதலாம் என்பதால், முதலிரண்டு poemக்கான paragaraphs தயார் செய்தாலே போதும். 

இது தற்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கும் மாணவர்களுக்கான யோசனை மட்டுமே. 2-ம்தாளில் கட்டுரைக்கான கே.எண்: 12-ல், கதைதானே என்று கதைவிடுதல் கூடாது. படித்து சென்று எழுதுவதே நலம். சொந்தமாக எழுதும் மீத்திறன் மாணவர்கள் கூட, தங்களது சொல்லாக்கத்தில் பாடப்பகுதி சொற்களஞ்சியத்திலிருந்து கட்டுரையாக்குவது நல்லது. சராசரி மாணவர்கள் கட்டுரைகளைத் தவிர்த்து விடுவார்கள். கொடுத்திருக்கும் குறிப்புகளை வைத்தே எழுத வேண்டிய கட்டுரை என்பதால், 10 மதிப்பெண் கேள்வியைத் தவிர்க்காது எழுதுவது மதிப்பெண் சரிவைத் தடுக்கும். 

பிரிவு-F,10 மார்க் பொதுக்கட்டுரையில், வெறுமனே கதையாக அல்லாது தகவல்கள் நிரம்பிய தனிப்பட்டவை மற்றும் அறிவியல் தொடர்பான தலைப்புகளை சாய்ஸில் தெரிந்தெடுத்து எழுதுவது மார்க் குறைக்க வாய்ப்பளிக்காது. மேற்கண்ட தலைப்புகளில் முன்பே தயார் செய்து அவற்றை எழுதுவதே தவறுகளையும் தவிர்க்கும்

கல்பாக்கத்தில் காலிப் பணியிடங்கள்

 
 
கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிறுவனம் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய உரிய தகுதி கொண்டோர் டிசம்பர் 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

காலிப் பணியிடங்கள்: 50 

இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், இயந்திரப் பொறியியல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் இந்த ஆராய்ச்சியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பி.இ., பி.டெக், பி.எஸ்சி. பொறியியல் போன்ற இளநிலைப் பட்டமோ முதுநிலைப் பட்டமோ பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய காலிப் பணியிடத்துக்குத் தேவையான பட்டம் பெற்றிருப்பவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.

வயது: 2014 ஜூலை 1 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் சலுகை உண்டு. 

சம்பளம்: ரூ.16,000 

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப் பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னை, கொல்கத்தா, புவனேஷ்வர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
சிறப்புத் தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் நேரிடையாக நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நேர்காணல் சென்னையிலும், கல்பாக்கத்திலும் நடத்தப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.igcar.gov.in/ என்னும் இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தையும் நுழைவு அனுமதிச் சீட்டையும் பதிவிறக்கி, பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Administrative Officer [R], Recruitment Section, Indira Gandhi Centre for Atomic Research, Kancheepuram District, Kalpakkam – 603102, Tamil Nadu. 

விண்ணப்பத்தை அனுப்பும்போது அஞ்சல் உறையின் மீது JRF, Advt. No. 3/2014 என்பதையும் என்ன பிரிவுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். 

கூடுதல் விவரங்களுக்கு: http://www.igcar.gov.in/recruitment/Advt3_JRF2014.pdf
முக்கிய நாள்கள்:விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 12.12.2014
எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியல் வெளியிடப்படும் நாள்: 26.12.2014 

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 11.01.2015
 
நேர்காணல் நடைபெற உள்ள நாள்: 02.02.2015 - 06.02.2015

 பணியில் சேர வேண்டிய நாள்: 23.02.2015

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

 
 
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பெரியோர் வாக்கு!
அது சரிதானே? 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அணுக்களைப் பற்றி விவாதித்த நம் முன்னோர்கள் பெருமைமிக்கவர்கள்தானே? 

நாமே அணு
 
அணுக்களின் சேர்க்கைதான் நீங்களும், நானும். நாம் சுவாசிக்கும் காற்றும், இந்தக் கணினியும் ,உங்கள் கையில் உள்ள நாளிதழும், தூரமாகத் தெரிகிற நட்சத்திரங்களும் எல்லாமும் கூட அணுக்களால் ஆனவை. ஓர் அணுவின் உட்கருவைச் சுற்றி ஓடும் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் எனும் அணுத் துகள்களின் எண்ணிக்கைகள் மாறுபடும்போது வேறுவேறு பொருள்கள் உருவாகின்றன. பார்வைக்குப் பலவிதமாகப் பொருள்கள் தோற்றமளித்தாலும் உள்கட்டமைப்பில் எல்லாம் அணுக்கள்தான்.
அதனால் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழிக்குள்ளே விஞ்ஞானம் இருக்கிறது. 

எங்கும் அணுவா? 

அணுக்கள் இல்லாத இடத்தில் அந்தப் பழமொழி பொருந்துமா?
பிரபஞ்சத்தில் அணுக்கள் எங்கும் நிறைந்து இருக்கின்றனவா? என்ற கேள்விகளை நாம் கேட்டால் என்ன ஆகும்? 

பூமியைப் பொறுத்தவரை அது 71 சதவீதம் தண்ணீரும் 29 சதவீத நிலமுமாக இருக்கிறது. இவை அனைத்தும் அணுக்களின் சேர்க்கைதான். 

நமது பூமி சூரியன் எனப்படும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றும் கோள்களில் ஒன்றாக உள்ளது. சூரிய மண்டலம் மொத்தமும் பால்வெளி மண்டல விண்மீன் பேரடை எனப்படும் கேலக்ஸியில் உள்ளது.அந்த காலக்ஸியைப் போலக் கோடிக்கணக்கானவை பிரபஞ்சத்தில் உள்ளன. அவற்றில் பல அணுக்களால் கட்டமைந்து இருக்கின்றன. 

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பூமியைப் போலவே அணுக்களால் ஆனவையாக இருக்க வேண்டும் என 30 வருடங்களுக்கு முன்பாகக்கூட விஞ்ஞானிகள் நம்பினர். தற்போது வந்துள்ள தகவல்களை மதிப்பிட்டுப் பார்க்கும் போது இந்தப் பிரபஞ்சத்தில் அணுக்கள் என்பவை 4.6 சதவீதம்தான் இருக்கின்றன எனத் தெரிய வந்துள்ளது. மீதி உள்ள 95 சதவீத பிரபஞ்சமும் அணுக்கள் இல்லாத வகையில்தான் கட்டமைந்துள்ளது. 

கரும்பொருள் 

4.6 சதவீத அணுக்களின் சேர்க்கையின் விளைவாக உருவான பொருள்களைத்தான் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நாம் இன்னும் தெரிந்து கொள்ளாத வடிவத்தில் கரும் பொருள் பிரபஞ்சத்தில் 24 சதவீதம் இருக்கிறது, அது எந்த ஆய்வகத்திலும் இன்னமும் பரிசோதிக்கப்படாதது என்கிறது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா. அது மட்டும் அல்ல. இது வரை அறியப்படாத கரும் ஆற்றல்தான் 71.4 சதவீதம் பிரபஞ்சத்தில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. 

அவனன்றி...
 
பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி இதுவரை விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்டுள்ள ‘மாபெரும் வெடிப்பு’ எனும் கொள்கையின்படி அணுக்கள் என்பவை பிரபஞ்சத்தின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தோன்றியவை. அவை காலப்போக்கில் மாறியும் வருகின்றன. அந்த மாற்றத்தின் பல்வேறு வடிவங்களில் ஒன்றாக நாமும் இருக்கிறோம். அணுக்கள் எங்கும் நிறைந்தவையாக இல்லை. அதனால் இனி “ அவனன்றிக் கரும் பொருளும் அசையாது” என்றுதான் மாற்றிச் சொல்ல வேண்டும்.

மொழிகளுக்கு இடையே அறிவைப் பரிமாறியவர்

 

டிசம்பர் 2 - மு.கு.ஜகந்நாதராஜா மறைந்த நாள்
 
மு. கு. ஜகந்நாதராஜா (1933 - 2008) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, இந்தி, ஆங்கிலம், துளு எனப் பல மொழிகளை அறிந்தவர். அதனால் அவர் பன்மொழிப்புலவர் எனப் புகழப்பட்டார். 

ஜகந்நாதராஜா ராஜபாளையத்தில் பிறந்தவர். அவரது முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள். தனது பள்ளிப் பருவத்தில் தெலுங்குப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே அவர் படித்தார். 

தெலுங்கில்.. 

அதன்பிறகு அவர் தன் விடாமுயற்சியால் பல மொழிகளை ஆழமாகக் கற்றுக்கொள்ள உழைத்தார். தமிழில் ஆழமான ஞானம் பெற்றபிறகு அவர் தமிழின் மேன்மைமிக்க இலக்கியங்களான திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பல்கலைக்கழகம் அவற்றை வெளியிட்டிருக்கிறது.
‘முத்தொள்ளாயிரம் எனும் பழந்தமிழ் நூலை தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து பெரும் சாதனை செய்துள்ளார். 

தமிழில்..
 
மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தைத் தெலுங்கில் இயற்றினார். அதை 1988-ம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதைப் பெற்றார். 

சாகித்ய அகாடமி தமிழில் மொழிபெயர்ப்புக்காக வழங்கிய முதல் விருது இதுதான். “வடமொழி வளத்திற்குத் தமிழரின் பங்கு” என்ற ஆய்வு நூலையும் அவர் படைத்துள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காகத் “தமிழும் பிராகிருதமும்” என்ற ஆய்வு நூலை எழுதினார். இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994), திராவிட மொழிகளில் யாப்பியல் உள்ளிட்ட பல நூல்களை எழுதி உள்ளார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அவரைத் தனது வருகைதரு பேராசிரியராக ஏற்றுப் பெருமைப்படுத்தியது. அந்தப் பொறுப்பை ஏற்று அந்தக் காலகட்டத்தில் “தமிழக, ஆந்திர வைணவத் தொடர்புகள்” என்ற ஆய்வு நூலை அவர் எழுதினார். 

பழைய மொழியிலும்..
 
புத்தர் காலத்தில் மக்களின் மொழியாக இருந்த பாலி மொழியில் இருந்த ‘மிளந்த பண்ஹா' என்ற பவுத்தத் தத்துவ நூலை மொழிபெயர்த்துள்ளார். இது பேராசிரியர் மாக்ஸ் முல்லர் வெளியிட்ட கீழ் திசைப் புனித நூல் வரிசையில் இடம் பெற்ற சிறப்பான புத்தகம். பவுத்தத் தத்துவத்தை விளக்கும் ‘உதானம்' என்ற அரிய நூலையும் மொழியாக்கம் செய்தார். 

பல மொழிகளுக்கு இடையே மனித அறிவைத் துணி நெய்வதைப் போல அவர் நெசவு செய்தார். குன்றக்குடி அடிகளார் பன்மொழிப் புலவர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கி னார். மு.கு.ஜகந்நாதராஜா 2. 12. 2008 அன்று தனது 75-ம் வயதில் இயற்கை எய்தினார்.

சாதனையாளர் ரோஸி கிங் - விடாமுயற்சி இருந்தால் ஆட்டிசத்தை வெல்லலாம்!



வசீகரிக்கும் முகமும் புத்திசாலித்தனமான பேச்சும் கொண்ட 16 வயது ரோசி கிங் குழந்தைகளுக்கான எம்மி விருது உட்பட இங்கிலாந்தில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஒருவகை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் ரோஸி. ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘என் ஆட்டிசமும் நானும்’. பிபிசியில் ஒளிபரப்பான இந்தச் சிறப்பு நிகழ்ச்சி பெரிய அளவில் பாராட்டுகளை வாரிக் குவித்தது. 

உங்களுக்கு ஆட்டிசம் என்பதை எப்போது அறிந்துகொண்டீர்கள்?
 
‘நான் அஸ்பர்ஜர் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவள். இது ஆட்டிசத் தில் ஒரு வகை. சிறிய வயதில் கண்டுபிடிக்க முடியாது. யாருடனும் கலந்து பேச முடியாமல் இருக்கும் குறைபாடு. ஒன்பது வயதில் கண்டுகொண்டோம். பிறகு மருத்துவர்களைச் சந்தித்து, முறையாகப் பயிற்சிகளை மேற்கொண்டோம். இன்று நானாகச் சொன்னால்தான் என் குறைப்பாட்டை உங்களால் கண்டுபிடிக்க முடியும். இன்று ஓவியங்கள் வரைகிறேன், கதைகள் சொல்கிறேன், நிகழ்ச்சிகளை வழங்குகிறேன் என்றால் அதற்குக் காரணம் என் பெற்றோர்தான். குறிப்பாக என் அம்மா.’ 

உலகிலேயே மிக மிக அழகான சந்தோஷமான குடும்பமும் எங்களுடையதுதான். அதேபோல உலகிலேயே மிக மிக சோகமான குடும்பமும் எங்களுடையதுதான் என்று சொல்லும் ரோஸியின் கூற்று உண்மையானது. ரோஸியின் தங்கையும் தம்பியும் ஆட்டிசத்தால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதையும் இழுத்துப் போடுவது, உயரமான இடங்களில் ஏறுவது என்று குறும்புகளின் எல்லையில் இருப்பான் தம்பி. ஒரு வார்த்தைகூடப் பேச முடியாமல் அமைதியாகச் சிரித்துக்கொண்டிருப்பாள் தங்கை. 

‘ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய பெற்றோர்கள் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. குறைபாடுடைய மூன்று குழந்தைகளை இருபத்தி நான்கு மணி நேரமும் கவனித்துக்கொள்வது என்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? வீட்டைச் சுத்தம் செய்வதே பெரும் வேலையாக இருக்கும் அம்மாவுக்கு. ஒருநாள் பையில் இருந்த அரிசியை வீடு முழுவதும் இறைத்துவிட்டான் தம்பி.
அம்மா ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார். பிறகு என்னையும் அழைத்தார். எல்லோரும் தம்பியுடன் சேர்ந்து அரிசியில் விளையாடி விட்டு, வீட்டைச் சுத்தம் செய்தோம். வேலையில் இருந்து திரும்பிய பிறகு அப்பா எங்களைக் கவனித்துக்கொள்வார். அம்மாவும் அப்பாவும் தங்களின் மூன்று குழந்தைகள் குறித்து ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை.’ 

மூன்று குழந்தை களையும் கவனித்துக் கொள்வதோடு, ரோஸியின் முன்னேற் றத்திலும் அக்கறை செலுத்தி வருகிறார் அவருடைய அம்மா ஷரோன் கிங். தன்னுடைய மூன்று குழந்தைகளையும் வைத்து ஆட்டிசம் குறித்த கதைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஷரோன். அந்தக் கதைக்குப் படங்கள் வரைந்து கொடுத்திருக்கிறார் ரோஸி. படிக்க வைப்பது, எழுத வைப்பது, பேச வைப்பது, நடிக்க வைப்பது என்று ரோஸியின் ஒவ்வொரு செயலிலும் ஷரோனின் பங்களிப்பு இருக்கிறது. 

ஆட்டிசம் குறித்த புரிதல்கள் இப்போது இருக்கிறதா? 

‘ஓரளவு விழிப்புணர்வு வர ஆரம்பித்திருக்கிறது. இப்போதும் எங்களைப் பார்க்கும் சிலர், மிக மோசமான வார்த்தைகளில் பேசுவதுண்டு. அவர்களைக் கண்டு எனக்கு வருத்தமில்லை. அவர்கள் பக்குவமடையாத மனிதர்கள். இன வேற்றுமை, பாலினப் பாகுபாடு, குறைபாடுள்ள மனிதர்களை நடத்தும்விதங்களில் கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். அப்படி மாற்றம் வந்தால்தான் நாம் நாகரிகச் சமூகத்தில் வாழ்கிறோம் என்று அர்த்தம்.’ 

ரோஸியின் லட்சியம்?
 
‘தொழில் முறை நடிகையாக வர வேண்டும் என்பதும் சிறந்த கதை சொல்லியாக வேண்டும் என்பதும் தான் என் லட்சியம். வாழ்நாள் முழுவதும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை சமூகக் கடமையாக நினைக்கிறேன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளைப் பெற்ற என் பெற்றோருக்குச் சின்ன ஆறுதல் என்னுடைய வெற்றி. இங்கிலாந்தில் நூற்றுக்கு ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் என் அம்மாவின் புத்தக விற்பனையில் இருந்து கிடைக்கும் வருமானத்தைச் செலவிடுகிறோம். நானும் ஆட்டிசம் குறித்த புத்தகத்தை இப்போது எழுதி வருகிறேன்.’ 

குழந்தைக்கு ஆட்டிசம் என்றால் என்ன செய்ய வேண்டும்? 

‘சில வகை ஆட்டிசத்தை எவ்வளவு வேகமாகக் கண்டறிகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் குணப்படுத்திவிட முடியும். ஆட்டிசம் என்று முத்திரைக் குத்தி, ஒரு சின்ன டப்பாவில் போட்டு எங்களை அடைத்துவிட வேண்டாம். மாபெரும் விஞ்ஞானிகள் ஐசக் நியூட்டனும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். பின்னாளில் உலகையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். பெற்றோருக்கு நான் சொல்வது இதைத்தான் : ஆட்டிசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்; நாளை உங்கள் குழந்தையும் ஒரு விஞ்ஞானியாகலாம்… குறைந்தது ரோஸியாக வரலாம். பொறுமை, நம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் ஆட்டிசத்தை வெல்லலாம்!’​